பிரபஞ்சம் காப்போம் -– 1

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

நாம் வாழும் பூமியானது, உலகிலுள்ள 800 கோடிக்கும் மேலான மனிதர்களுக்கும், எண்ணிலடங்கா உயிரினங்களுக்கும், உணவு, உறைவிடத்தை அளித்துப் பேணிக் காத்து வருகிறது. இன்னும் சொல்வதானால், மனிதர்கள் உள்பட எந்த ஜீவராசியும் வெவ்வேறு நாடுகளில், ஊர்களில் பிறக்கலாம். வாழலாம். இறக்கலாம். ஆனால், அனைவரது பிறப்பு, வாழ்வு, இறப்பு நிகழ்வது இந்த ஒரே பூமியில்தான். பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள்.

ஒட்டுமொத்த பால்வெளி மண்டலத்திலேயே பூமிக்கு மட்டுமேயான சிறப்பு என்னவென்றால் பூமியில் மட்டுமே மனிதர் உயிர் வாழ்வதற்கு உகந்த சூழல் இருக்கிறது. பூமியின் வளிமண்டலம் 78 சதவிகித நைட்ரஜன், 21 சதவிகித ஆக்சிஜன், 1 சதவிகிதம் மற்ற வேதி வாயுக்களால் நிரம்பியுள்ளது. இந்தச் சமநிலையானது, நாம் சுவாசிப்பதற்கும், வாழ்வதற்கும் ஏற்றதாக இருக்கிறது. மற்ற கோள்களில் வளிமண்டலம் இருந்தாலும்கூட, பூமியைப் போலச் சுவாசிக்கக்கூடிய வாயுக்களைக் கொண்டதாக இல்லை.

சூரியனில் இருந்து 15 கோடி கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பூமி சூரிய குடும்பத்திலுள்ள மற்ற கோள்களைப் போலவே, பூமியும் சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியின் விட்டம் 12,742 கி.மீ. அதன் சுற்றளவு 40,075 கி.மீ. இந்தப் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 23 மணி நேரம் 56 நிமிடம் 4.09 வினாடி எடுத்துக் கொள்கிறது. பூமி ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட 1000 மைல், அதாவது சுமார் 1674 கி.மீ எனும் வேகத்தில் சுழல்கிறது.

பூமியின் எடையை அறிய 6 என்ற எண்ணை எழுதி அதன் பின்னால் 24 பூஜ்யங்களைச் சேர்த்தால் பூமியின் எடை கிலோகிராமில் கிடைக்கும். புவி ஈர்ப்பு விசையிலிருந்து பூமியின் எடை கணக்கிடப்படுகிறது. இதை எடை எனக்கூறுவதைத் தவிர்த்து “நிறை” எனக் கூறவேண்டும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். பூமியின் எடை அதிகரிக்குமா? பூமி ஒரு மாபெரும் வேக்கும் கிளீனர் போன்றது, இது அனைத்து தூசி மற்றும் சிறிய பொருட்களை உறிஞ்சுகிறது. இதனால் ஆண்டுக்கு 40000 கிலோ எடை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், நமது வளிமண்டலத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 95000 கிலோ ஹைட்ரஜன் மற்றும் 1500 கிலோ ஹீலியம் வெளியேறுகிறது. எத்தனை கோடானு கோடி மனிதர்கள் பிறந்தாலும் பூமி தாங்கிக்கொள்ளும், அப்போது கூட மனித இனம் தான் அழியுமேயன்றி புவியின் சுழற்சியில், அன்றாடச் செயல்பாட்டில் எந்தக் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் நிகழ்ந்துவிடாது.

இன்னொரு முக்கிய விஷயம், ஐந்தாவது பெரிய கோளான பூமியைத் தவிர மற்ற அனைத்து கோள்களுக்கும் கிரேக்க, ரோமானிய ஆண், பெண் கடவுள்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. பூமிக்கு “எர்த்” என்ற ஆங்கில, ஜெர்மன் சொல் சூட்டப்பட்டது. நிலப்பகுதி என்ற எளிமையான அர்த்தம் கொண்ட சொல் அது. அதாவது பழைய ஆங்கிலத்தில் எர்தா (ertha), ஜெர்மனில் எர்டே (erde).

பூமியில் என்ன இருக்கிறது

பூமியின் இயற்பியல் பண்புகள், அதன் புவியியல் வரலாறு மற்றும் அதன் சுற்றுப்பாதை ஆகியவை லட்சக்கணக்கான ஆண்டுகளாக உயிரினங்கள் வாழ அனுமதித்துள்ளன. பூமியில், கோடிக்கணக்காக மக்கள், புல், பூண்டு, தாவரங்கள், மரங்கள், பறவைகள், விலங்கினங்கள், புழு, பூச்சிகள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. உலகில் ஒட்டுமொத்தமாக 87 லட்சம் இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், எண்ணிலடங்கா மலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், எரிமலைகள், மனிதர்கள் உருவாக்கிய வானளாவிய கட்டடங்கள், தொழிற்சாலைகள், அணைகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, சுழன்று வருகிறது பூமி. மற்ற கோள்களில் இருந்து பூமி முக்கியமாக மாறுபடும் விஷயம், இது கடல்களால் சூழப்பட்ட கோள் என்பதுதான். பூமியில் திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் நீர் உள்ளது. இது பனிப்பாறைகள், சதுப்பு நிலங்கள், ஏரிகள், ஆறுகள், கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் வடிவில் பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட முக்கால் பகுதியை உள்ளடக்கியுள்ளது. பூமியின் மொத்த நீரில் 97% கடல்களில் உப்பு நீராக உள்ளது.

பூமியானது கடும் குளிர், கடும் வெப்பம் நிறைந்தது. இதுவரை பதிவுசெய்யப்பட்ட அதிக வெப்பநிலை அமெரிக்காவில் உள்ள டெத் வேலியில் பதிவானது. அங்கு 1913ஆம் ஆண்டு, ஜூலை 10ஆம் தேதி வெப்பம் 56.7 டிகிரி செல்ஷியசாகப் பதிவானது. அண்டார்டிகாவிலுள்ள வோஸ்டாக் நிலையத்தில் 31 ஜூலை 1983இல், மைனஸ் 89.2 டிகிரி செல்ஷியசாகப் பதிவானதே மிகக் குறைந்த வெப்ப நிலையாகும்.

இன்றைய நிலை

இன்றைக்குப் பூமி எதிர்கொள்ளும் பிரச்சனைகளான புவிவெப்பமடைதல், தண்ணீர் பற்றாக்குறை, மழையின்மை, பெருவெள்ளம் என அனைத்திற்கும் காரணம் நாம்தான். ஒருபுறம் மக்கள்தொகை பெருக்கம். மறுபுறம் நம் பேராசை. பூமி நமக்கானது மட்டுமல்ல. இதிலுள்ள ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உரியது என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவில்லை. நம் பேராசையானது செயற்கைப் பொருட்களை உருவாக்கத் தொடங்கியது. அதன் தொடக்கமாகத்தான் காடுகளை அழிக்கத் தொடங்கினோம். மரங்களை வெட்டினோம். இதனால் விலங்குகளின் உறைவிடங்கள் அபகரிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் நிற்கின்றன.

“சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு” எனப் பாடிய நாம் இன்றைக்குச் சிட்டுக்குருவி காணாமல் போனது குறித்துக் கவலைப்படவில்லை. புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், “தேனீக்கள் என்று அழிகிறதோ அன்று உலகமும் அழிந்துபோகும்” என்கிறார். அதிகமான பூச்சி கொல்லி உபயோகமானது, மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீ உள்ளிட்ட பல்வேறு பூச்சி இனங்களைக் கொல்வதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பூமியின் வளங்களைத் தொடர்ந்து சூறையாடி வருகிறோம். மண், பாறைகள் எனக் கனிம வளங்கள் இதற்குத் தப்பவில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் மூலம், நீரை நிலத்திற்குள் செல்ல விடாமல் தடுக்கிறோம். நீரை ஒவ்வொரு நாளும் மாசுபடுத்தி வருகிறோம். இவ்வாறான காரணங்களால் நாம் வாழும் பூமி பெருமளவில் பாதிப்படைந்து விட்டது.

இயற்கை வளங்களைத் துவம்சம் செய்வதால் நம் வாழ்வும் பாதிக்கிறது. உலகில் நான்கில் ஒரு சிறார் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும், உலகம் முழுவதும் சுமார் பத்து லட்சம் குழந்தைகள், பிறந்த அன்றே உயிரிழப்பதாக ஐ.நாவின் குழந்தை நல நிறுவனம் யூனிசெஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆபத்து

பிரிட்டனின் விண்வெளி வீரர் ராயல் மார்ட்டின் ரீஸ் “நமது பூமி 45 மில்லியன் நூற்றாண்டுகளாக உள்ளது. ஆனால் இந்த நூற்றாண்டு மோசமானது. இப்போது மனிதன் என்ற இனத்தின் கையில் பூமியின் எதிர்காலம் உள்ளது. உயிரினங்கள் வாழும் கோளத்தின் வளத்தைத் திரும்பச் சரி செய்ய முடியாத வகையில், சிதைக்கக் கூடியவர்களாக நாம் இருக்கிறோம்” என்கிறார். இது தொடர்பான ஓர் ஆய்வு மையத்தைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கி உள்ளார்..

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அறிஞர் டோபி ஆர்டு, “தி பிரிசிப்பைஸ்” என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில், “செங்குத்தான சரிவின் விளிம்பில் உள்ள ஒரு பாதையில் இருக்கிறோம், ஓர் அடி தவறாக எடுத்து வைத்தாலும் பேரழிவு நிச்சயம். சுழன்று கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், பசுமையான, ரம்மியமான வாய்ப்புகள் நம் கண் எதிரே இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால் தற்போதைய அசாதாரணமான மற்றும் ஆபத்தான காலத்தை நாம் கடந்தாக வேண்டும். இந்த நூற்றாண்டில் இனம் அழிவதற்கான ஆபத்து உள்ளது” என்கிறார். மேலும், “நமது முன்னோர்கள் யோசித்துக்கூடப் பார்த்திடாத பேரழிவு மற்றும் ஆபத்துகளை நாமே உருவாக்கிக் கொண்டோம். இதுதான் இப்போது பற்றிக் கொண்டு தொங்கும் நிலையை உருவாக்கியுள்ளது” என்கிறார். அணு ஆயுதப் போர், உயிரைக் கொல்லும் கிருமிகளை உருவாக்குதல் போன்றவற்றை உதாரணங்களாக அவர் குறிப்பிடுகிறார்.

என்ன செய்யலாம்

“பூமி ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்திச் செய்யும், ஆனால் பேராசைகளை அல்ல” என்றார் மகாத்மா காந்தி. எனவே இந்த உலகில் நமக்குத் தேவையான அனைத்துமே நமக்குக் கிடைக்கிறது என்பதைப் புறந்தள்ளிவிட்டு நம்முடைய சுயநலத்திற்காகவும் பேராசைக்காகவும் பூமியின் வளங்களைச் சுரண்டி வருகிறோம். பூமி பசுமையாக வளம் நிறைந்ததாக இருந்தால் மட்டுமே, நாம் வாழ முடியும். உலகம் வெப்பமயமாகுதல், காற்று மாசு, காடு அழிப்பு, பசுமைக் குடில் விளைவுகள், தண்ணீர் பஞ்சம் என்று பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு நம்மிடமே உள்ளது. அதற்கு, முடிந்தவரை அதிக அளவில் மரங்கள் நட்டு, தண்ணீர் சேமிப்பு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்தி, இயற்கையை அதன் வழியிலேயே பாதுகாத்தால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு இயற்கை வளங்களை விட்டுச் செல்லமுடியும்.

மேலும், நம் அன்றாட வாழ்வில் கலந்து விட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தே ஆகவேண்டும். நாம் பயன்படுத்தித் தூக்கி போடும் ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடலிலும், பூமிக்கு அடியிலும், மக்கிப் போகாமல் பூமியின் வளத்தையும் பாதித்து உயிரினங்களையும் காவு வாங்குகிறது. ஒன்றரை கோடி டன்னுக்கும் மேலான பிளாஸ்டிக் கழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உருவாகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல் மிகமிக அவசியம். அவசரம்.

உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதே சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கருத்து. மழை நீரை சேமிப்பது, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது மற்றும் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது ஆகிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

மின்சார நுகர்வில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. ஆனாலும் நம்முடைய மின் உற்பத்தி ஆதாரங்கள் நிலக்கரி, எண்ணெய் ஆகிய மறு சுழற்சி செய்ய முடியாத ஆதாரங்களைச் சார்ந்து தான் இருக்கின்றன. எனவே சூரிய சக்தி, அலை ஆற்றல், காற்று, புவி வெப்ப ஆற்றல் (பூமியின் மேலோட்டத்தில் உள்ள சூடான பாறைகளிலிருந்து நாம் பெறும் வெப்ப ஆற்றல் புவிவெப்ப ஆற்றல்) என மரபுசாரா ஆற்றலை மின்உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு உணவை வீணாக்குவதைத் தவிர்ப்போம். மிதிவண்டி, நடைபயணப் பயன்பாட்டை அதிகரிக்கலாம். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம்.

மறுசுழற்சி செய்யக்கூடிய தயாரிப்புகளை அதிகமாகப் பயன்படுத்திச் சுழற்சி செய்ய முடியாத பொருட்களின் பயன்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும். நீங்கள் வசிக்கும் இடங்களில் கிடைக்கும் பொருட்களை அதிகமாக வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இந்த மாற்றங்கள் நாளடைவில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்

பரிசாக மரக்கன்றுகளை வழங்கலாம். ஆறு மற்றும் நீர் நிலைகளின் கரைகளில், கல்விநிலையங்களில், அப்பார்ட்மென்ட் கட்டிடங்களின், சுற்றுவட்டாரத்தில் என்று எந்த இடத்திலெல்லாம் மரம் வளர்க்க முடியுமோ எல்லா இடங்களிலும் மரங்களை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். பூமியை நாம் பாதுகாத்தால்… பூமி நம்மைக் காக்கும்.. வாழவைக்கும்.

(ஏப்ரல் – 22 சர்வதேச பூமி தினம்).