மூளை என்னும் முதல்வன்


திரு. A.மோகனராஜூ, சேலம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றால், பிறர் நமக்கு வலிந்து கொடுப்பதில்லை நாம் விரும்பிப் பெருவது என்று பொருள். “சேப்பியன்ஸ்”, மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு என்ற புத்தகத்தை “யுவால் நோவா ஹராரி” (Yuval Noah Harari) என்ற அறிஞர் எழுதி இருக்கிறார். அதில் மனிதனின் அறிவியல் பெயர் சேப்பியன்ஸ் என்றும் அதன் பொருள் கூட்டமாக வாழும் விலங்கு என்றும் சொல்கிறார்.

கூட்டமாக வாழும்போது ஒரு மனிதனுக்கு பிறர் தராமல் இன்பமும் துன்பமும் எப்படிக் கிடைக்கும். இயற்கையின் சிறப்பான அமைப்பில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும், எதிர்ப்பண்புள்ள இரு பாலினத்தவரும் ஒன்றிணையும்போதுதான் கரு உருவாவதும் இன விருத்தியும் நடக்கிறது. அப்போது எல்லையில்லாத இன்பம் இருவருக்கும் மற்றவரிடம் இருந்து கிடைக்கிறது. தன் இணையால்தான் இன்பமும் துன்பமும் கிடைக்கிறது. பிறர் தர வாரா என்றால் எப்படி ஏற்கமுடியும்?

இன்பமும் துன்பமும் எங்கிருந்து வருகிறது?. இரவும் பகலும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பது, இரண்டும் சமமாகப் பிரிந்து ஒன்றாகவே உருளுகிறது, நாள் நகர்கிறது. நன்மையும் தீமையும் கலந்ததுதான் மனித வாழ்வு, விரைந்து செல்கிறது. நன்மை இல்லை என்றால் தீமையும் இல்லை. தீமை இல்லை என்றால், நன்மையும் இல்லை, இரண்டும் இல்லை என்றால் மனித வாழ்வும் இல்லை. சரி உண்மையில் தீதும் நன்றும் எங்கிருந்து வருகிறது.

“The Law of paying price” என்ற ஆங்கிலப் பழமொழி என்ன சொல்கிறது என்றால் எதை வாங்கினாலும் அதற்கு ஒரு விலையை நாம் கொடுக்க வேண்டும், அப்படி விலை கொடுக்காமல் எதையும் வாங்க முடியாது என்று சொல்கிறது. நன்மையாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி அதற்கான விலை ஒன்றை நாம் தந்தால் ஒழிய அது நமக்குக்கிடைக்காது, அதை நாம் வாங்க முடியாது. அது எதுவானாலும் அதை நாம்தான் வாங்குகிறோம்.

ஒரு நான்கு நன்மைகளையும், நான்கு தீமைகளையும் எடுத்துக்கொள்வோம் அது நமக்கு எப்படி வருகிறது என்று பார்ப்போம். உடல் நலக்குறைவு, சலிக் காய்ச்சல் என்று வைத்துக்கொள்வோம், பருவ நிலை மாறும்போது, எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் மனிதர்களுக்கு இந்த சலிக்காய்ச்சல் வருகிறது. இது கிருமிகளால் உடல் தாக்கப்பட்டு, நோய் வருகிறது. யாரோ ஒரு உடல் நலம் பாதிக்கபட்ட மனிதனின் மூலம்தான் இது பரவி நமக்கு வருகிறது என்றால் அவன் உங்களுக்குக் கொடுத்ததா?. ஆனால் கிருமிகள் உடல் நலமில்லாத ஒரு மனிதனைச் சுற்றி குறிப்பிட்ட வட்டத்திற்குள் இயங்குகிறது. அதற்குமேல் அதுவால் தொற்ற முடியாது. நீங்கள் கிருமி இருக்குமிடம் போகாமல் அது உங்களைத் தாக்காது. அல்லது உடல் நலம் இல்லாதவருடன் நீங்கள் நெருங்கிப்பழகாமல், அவர் பயன்படுத்திய பொருட்களை நீங்கள் பயன்படுத்தாமல், அவர் குடித்த தண்ணீரை நீங்கள் பருகாமல் எதுவும் உங்களை தொற்றாது. ஆக இந்த “சலிக்காய்ச்சல்” நீங்கள் வாங்கியதுதான்.

பணம் இழப்பு, வியாபார நட்டம், என்று எடுத்துக்கொண்டால் அது பிறர் கொடுப்பதல்ல. அடுத்த ஒருவன் நன்றாக, பணம் ஈட்டுகிறான், வியாபாரத்தில் லாபம் பெறுகிறான், என்றால், அது நம்மால் முடியவில்லை என்றால் அது நம் தவறுதானே ஒழிய, அது வேறு ஒருவர் கொடுப்பதல்ல.
விபத்து என்று ஒன்றை எடுத்துக்கொள்வோம். எவனோ ஒருவன் நம்மீது வந்து இடித்து நம்மையும், நம் வாகனத்தையும் ேசதப்படுத்துகிறான் என்று வைத்துக்கொள்வோம். ஒன்று நமக்கும் அதில் இருந்து தப்பிக்க வண்டியில் பிரேக்கும், வழியை மாற்ற ஸ்டீரிங்கும், அடுத்தவனுக்கு எச்சரிக்கை கொடுக்க ஒலிபெருக்கி எல்லாம் நம் கைவசம் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்தி விபத்தில் இருந்து தப்பிக்கலாம். நாம் தப்பிக்க முடியாத நிலையில் ஒருவன் முழுவதுமாக நம்மை மோதிச் சேதப்படுத்துகிறான் என்றாலும்கூட. அந்த இடம் போகாமல் இருந்தால் நாம் விபத்திற்குள் சிக்கமுடியாது அல்லவா, நாம்தானே அவ்விடம் சென்றோம். நம்மால் வந்ததுதானே இந்த வினை.
இறப்பு என்று வைத்துக்கொள்வோம். அது பிறர் தருகிற ஒன்றா?.

பிறந்த ஒவ்வொருவரும் அதைச் சந்தித்தே தீர வேண்டும். ஜப்பானிய அறிஞர் ஒருவர் என்ன சொல்கிறார் என்றால் ‘நாம் இறப்பதற்காகத்தான் பிறக்கிறோம்’ என்று சொல்கிறார். இது உண்மைதானே. வாழ்க்கையின் ஒரு முனை பிறப்பு மறுமுனை இறப்பு. நாம் பிறக்காமல் இறக்க முடியுமா, பிறந்தது யார் நாம்தானே. எதுவானாலும் அது நாம் வாங்குவதுதான் பிறர் கொடுப்பதல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

சரி இன்பத்திற்கு வருவோம். மனிதனின் சிறப்பான பண்பு என்று ஒன்று இருக்கிறது அது என்ன என்றால் நன்மை என்றால் அது நான் செய்தது, தீமை என்றால் அது எனக்குப் பிறர் செய்தது என்று சொல்வதுதான். கல்வி என்று எடுத்துக்கொள்ளுங்கள் நம்முடன் சேர்ந்து பலர் பள்ளிக்குச் சென்றார்கள், கல்லூரிக்கு நம்முடன் வந்தார்கள், அதில் ஒரு சிலரே நன்கு படித்து முன்னேறினார்கள். நல்ல வேலைக்குச் சேர்ந்தார்கள், உயர்ந்த வியாபாரம் செய்கிறார்கள். அது நாம் செய்ததுதான். ஒருவர் சொல்லித்தரலாம், பணம் கொடுக்கலாம், புத்தகம் நோட்டு வாங்கித்தராலாம். படித்தது யார், சிந்தித்தது யார், நீங்கள்தான். கல்வி என்பதை பிறர் தரமுடியாது நாம் நம் மூளையில் வளர்த்தெடுப்பது.

அடுத்து பணம் சம்பாதிப்பது. பணம் என்ற ஒன்று இந்த உலகில் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுமா?. அடுத்தவன் நமக்கு ஓசியில் கொடுத்துவிடுவானா?. அதிகப்படியான உழைப்பும், சிறந்தத் திட்டமும், நுண்ணறிவும், நம் மூளையைப் பயன்படுத்தாமல் பணம் கிடைத்துவிடுமா?. அது நாம் பெற்றது நம் மூளை சிறப்பாகச் செயல்பட்டதுதான் காரணம்.

சரி புகழுக்குள் செல்வோம், புகழ் என்று வந்தால் யார் கொடுத்து, புகழ் என்பது பிறரால் கொடுக்க முடியுமா?. உயர் பண்பும், நல்ல குணமும், கடின உழைப்பும் இல்லாமல் புகழ் தானாக வருமா. அது நாம் பெற்றதுதான். தாயும் தந்தையும் நம்மை பெற்றார்கள் ஆனால் புகழ் என்பது நாம் பெறுவது, அடுத்தவர்களால் அதைக் கொடுக்க முடியாது. பணம் கொடுப்பதுபோல இந்தா இந்தப் புகழை நான் தருகிறேன் பெற்றுக்கொள் என்று புகழை எடுத்துக் கொடுக்க முடியாது.