வெற்றியோடு விளையாடு!  – 22

டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

நாற்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் வாசகர்கள் இல. இரவி என்ற பெயரில் வெளியான படைப்புகளைப் படித்து மகிழ்ந்திருக்கலாம். துணுக்குச் செய்திகள், கவிதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், கட்டுரைகள், கவிதை, சிறுகதைகள் என்று பல்வேறு தளங்களில் படைப்புகள் தந்து வருபவர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் செ.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 

உயர்நிலைப் பள்ளி வரை மட்டுமே இவரால் படிக்க முடிந்தது.  அறுபதுகளில் நிலவிய வறுமை, தொடர்ந்து படிக்க முடியாமல்  துரத்தியது.  அப்பா கூலித் தொழிலாளி.  தினசரி வேலைக்கு போனால் தான் இரண்டு வேளை உணவாவது கிடைக்கும்.

வறுமையும், புலமையும் புலவர்களின் சொத்து என்பது போல  இரவி அவர்களின் குடும்பம் வறுமையில் இருந்த போது கூட,  தமிழ் ஆர்வம் மிக்கவராகவும் தமிழில் நல்ல இலக்கியங்கள் படைக்க வேண்டும் என்ற சிந்தனையும் இவரிடம் இயல்பாக வளர்ந்தது.

குடும்ப வறுமையைப் போக்க இவரும் கூலி வேலைக்குப் போனார். பேருந்து நடத்துனர் பயிற்சியும் எடுத்துக்கொண்டார்.

வேலை தேடிய வருடங்களில் அப்போதைய  சென்னை காவல்துறை ஆணையராக இருந்த  பால் அவர்களின் இல்லத்தில் சில ஆண்டுகள் வேலை செய்தார்.  அப்போது சுதேசமித்ரன் இதழில் இவர் எழுதிய முதல் பாடல் இவரைக் கவிஞர் ஆக்கியது.  இலக்கியவாதியான திரு எஸ்.பால் அவர்கள்  தன்னை அன்றே ‘கவிஞரே’ என அழைத்ததைப் பெருமையாக நினைவு கூறுகிறார் இரவி.‌

1985 – ஆம் ஆண்டு  இவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம். தமிழ்ப்பசி போக்க நினைத்தவருக்கு குழந்தைகளின் பசி போக்கும் வாய்ப்புக் கிடைத்தது.   அவருடைய கிராமத்திலேயே  அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியில் சேர்ந்தார்.‌

கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினார்.‌
செ. புதூரைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று கல்வியின் அவசியத்தைக் கூறி நூற்றுக்கணக்கான குழந்தைகளை தம் பள்ளியில் சேர்த்ததோடு அவர்களுக்கும் தமிழ் ஆர்வத்தை ஊட்டினார்.    பள்ளி மாணவர்களை வைத்து ‘சமுதாயப் புலிகள்’ என்னும் சமூக நாடகம் ஒன்றை அரங்கேற்றம் செய்து ஊர்ப் பெரியவர்களின் பாராட்டைப் பெற்றார்.

தொடர்ந்து அஞ்சல் வழியில் பி.லிட்.,  எம்.ஏ., பி. எட்., எம்ஃபில்., எம் காம்., எனப் படித்த இவர் ஜோதிடவியலில்
டி.ஏ., படிப்பையும் படித்தார்

பள்ளி சத்துணவு அமைப்பாளராக 18 – ஆண்டுகள் உள்ளூரில் பணிபுரிந்த இவருக்கு பட்டதாரி தமிழாசிரியர் பணி கிடைத்து, தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

வறுமையில் வளர்ந்தவர் அல்லவா?  ஒவ்வொரு மாணவனின் குடும்பச் சூழலைக் கேட்டு அறிந்து அதற்கான தீர்வுகளைச் சொல்லி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாணவர்களைத் தேர்ச்சி அடைய வைத்ததைப் பெருமையாக நினைக்கிறார்.

‘கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்கிறது பகவத் கீதை!,  நானோ கடமையைச் செய் பலனை எதிர்பார் தேர்வில்’  என மாணவர்களின் ஆழ்மனதில் பதிவு செய்து வெற்றி கண்டேன்.

மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.