வாழ்த்துக் கட்டுரை 

   மதுரை.ஆர்.கணேசன்

கனித முகஅமைப்பு கொண்ட “..சோபியா..” உலகிலேயே முதல்முறையாக சவூதிஅரேபியா நாட்டில் குடியுரிமை பெற்ற முதல் “ரோபோ” அறிமுகமானது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற பலநகரங்களில் கல்வி நிலையங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், விவசாயம் போன்ற முக்கிய துறைகளில் ரோபோக்களின் வருகை அதிகரிக்கின்றன.

ஆனால் எங்கோ ஒரு கிராமத்திலிருந்து வெகுண்டு எழுந்த பாலாஜி திருநாவுக்கரசு எனும் இளைஞர் என்னாலும் “..ரோபோவை..” உருவாக்க முடியும் என்பது மட்டுமல்ல அதில் சர்வதேச விருதுகளையும் பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். 

“HOW TO MAKE A ROBOT” என்கிற புத்தகத்தையும் எழுதியிருக்கும் இவர், அன்று அரசு பள்ளியில் படித்த மாணவர் இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு கண்டுபிடிப்புக்களுக்கான கதாநாயகனாக அவதாரமெடுத்து “ரோபோ பாலாஜி” என்று அழைக்கப்படுகிறார்.   

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிப்புரம் கிராமத்தை சேர்ந்த தச்சு ஆச்சாரி திருநாவுக்கரசு, முருகவேணி தம்பதியின் இளைய மகன் பாலாஜி தனது ரோபோ கண்டுபிடிப்புகளுக்காக ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பயணித்து ரோபோ கண்டுபிடிப்புகளின் ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்து அதற்கான நான்கு சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமணங்கள், சுற்றுலாத்தளங்கள்,  திரைப்படக்காட்சிகள், திருவிழாக்கள், போராட்டங்கள், மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்கள் மற்றும் எல்லா இடங்களிலும் கழுகுப் பார்வையில் படமெடுக்கும் “ட்ரோன்களை”
கருவிகளை 12 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொலை நோக்கு பார்வையில் வடிவமைத்திருக்கிறார்.

எளிய மக்களும் பலன் பெறும் வகையில் விதைவிதைக்கும் ரோபோ, ஹோம் ஆட்டோமெஷன் ரோபோ, சர்வீஸ் ரோபோ, வெட்டிவேர் அறுவடை
செய்யும் ரோபோ ஆகிய ரோபோக்களுக்கு தயாரிப்பு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார்.

ரோபோட்டிக்ஸ் துறையில் வளர்ந்து வரும் அவருக்குப் பல நிறுவனங்களும் வேலை வாய்ப்பை வழங்கியது. ஆனால், நம்நாட்டிலேயே ரோபோட்டிக்ஸ்
துறை வளர்ச்சியில் தானும் பங்கெடுத்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

அதற்காக தன்னைப் போல அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ரோபோ உருவாக்கப் பயிற்சி கொடுக்க நினைத்தார். விழுப்புரம், திருப்பூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திருநெல்வேலி போன்ற பல ஊர்களில் உள்ள 70க்கும் மேலாக அரசுப் பள்ளிகளை தேர்ந்தெடுத்துப் பயணித்தார்.

ஒரு நாளைக்கு ஒரு பள்ளிக்கு 200க்கும் மேலான மாணவர்களுக்கு தொடர்ந்து மூன்று மணி நேரம் செய்முறை பட்டறை பயிற்சி அளிக்கப்பட்டது. இப்படி கடந்த 4 ஆண்டுகளில் 11,000க்கும் மேலான பள்ளி மாணவர்களுக்கு “இலவசமாக” ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளித்திருக்கிறார்.

தமிழ் மொழியிலே ரோபோட்டிக்ஸ் பற்றி கற்றுக் கொடுப்பதற்காக “தமிழ் ரோபோட்டிக்ஸ் கிளப்” என்ற கிளப்பைத் தொடங்கியுள்ளார்.  இவை தவிர்த்து
4 வாட்சப் குரூப்களின் வழியே 130 தொழில் நுட்ப வல்லுனர்களை கொண்டு ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளித்து வருகிறார்.

அத்துடன் பாலாஜி தொடங்கியுள்ள “வில்லேஜ் டெக்னாலஜி” எனும் மையம், அதன் தனித்துவமான “லில்லிபாட்” என்ற ரோபோட்டிக்ஸ் கற்றல் கிட் மூலமாக, அனைத்து மாணவர்களுக்கும் ரோபோட்டிக்ஸ் கல்வி
சென்றடைய வழிவகைச் செய்துள்ளது.

இனி நம்மோடு “..ரோபோ..” பாலாஜி திரு நாவுக்கரசு…,

“..ஒரு சாதாரண ஏழை குடும்பம் தான் எங்க வீட்டுல, நான் முதல் பட்டதாரி. எங்களுடையது தச்சுக் குடும்பம். எங்க அப்பா மர வேலைகள் செய்து வந்தார். விவசாயத்திற்கான ஏர்கலப்பை, மாட்டு வண்டிகள், தவிர கதவு, ஜன்னல் எல்லாம் அப்பா, செய்து கொடுப்பார். சின்ன வயசுல அப்பா எப்படி செய்கிறாங்கனு பாத்திட்டே இருப்பேன்.

ஒருகட்டத்தில் நான் 6ஆவது படிக்கும் போது, மரக்கட்டைகள் வைத்து ஏர் கலப்பையை ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் வகையில் வடிவமைத்தேன். அப்போது தான் (1996ஆம் ஆண்டு) ஹோண்டா நிறுவனம் மனித உருவத்திலான ரோபோட்களை அறிமுகம் செய்தது.

அதை பார்த்ததில் இருந்தே எனக்கு அதே போல ரோபோ செய்யணும்னு ஆசை வந்தது. மரக்கட்டை, அட்டைப் பெட்டியெல்லாம் வைத்து ரோபோ பண்ண ஆரம்பிச்சேன் அப்படித்தான் ரோபோட்டிக்ஸ் மீதான ஆர்வம் தொடங்கியது.

ரோபோட்டிக்ஸ் தொடர்பான புத்தகங்கள், செய்தித் தாள்களை தேடித்தேடி படிக்கத் துவங்கினேன். ஸ்கூல் படிக்கும் போது, நிறையப் போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொண்டேன்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் பலமுறை பரிசு பெற்றேன் அது இன்னும் கொஞ்சம் ஊக்கம் தந்தது 11ஆம் வகுப்பு படிக்கும் போது, நான்
உருவாக்கிய ஹைட்ராலிக் ரோபோவிற்கு அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்தது அத்துடன் “இளம் விஞ்ஞானி” என்ற விருதும் பெற்றேன்.

 பள்ளி முடித்தபின் குடும்பத்தின் நிதிநிலைமை மோசமாக இருந்ததால், என்னால் கல்லூரியில் சேர முடியவில்லை ஒரு வருடம் காத்திருந்தேன். 

பலரிடம் உதவிகள் கேட்டுக் கஷ்டப்பட்டு எப்படியோ இன்ஜீனியரிங் காலேஜில் சேர்ந்தேன். காலேஜில் படித்து கொண்டிருந்த போதே, 2009ல் இப்போது பரவலாக அறியப்படும் “ட்ரோன்” எனப்படும் ஆளில்லாமல் பறக்கும் வாகனத்தினை வடிவமைத்தேன்.

எங்கள் வீட்டில் கஷ்டம் இருந்தாலும், எனக்கு ரூ 10,000 பணம் கொடுத்து சப்போர்ட் பண்ணாங்க ஆனா, போதிய வழிகாட்டுதல் இல்லாததால், அந்த புராஜெக்ட் தோல்வியில் முடிந்தது ஆனாலும், நான் முயற்சியை கைவிடவில்லை.

“தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கவுன்சில் சூரிய ஆளில்லா வான்வழி வாகன” திட்டத்தின் மேம்பாட்டுக்காக ரூ.10,000 நிதியுதவி அளித்தது அதற்காக, தமிழக அரசின் “பெஸ்ட் ஸ்டூடன்ட் புராஜெக்ட்” என்ற விருதும் கிடைத்தது.

2010ஆம் ஆண்டு, தண்ணீர் மற்றும் காற்றைக் கொண்டு இயங்கக் கூடிய ரோபோ ஒன்றை வடிவமைத்தேன். அந்த புராஜெக்ட் தான் ரோபோட்டிக்ஸ் துறையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு என்னைக் கொண்டு சென்றது.

என்னுடைய முயற்சிகளுக்கு மீண்டும் ஒருமுறை கைகோர்த்த சிலரால், ரோபோட்டிக்சில் M.TECH  முதுகலைப் பட்டம் பெற முடிந்தது.

ரோபோட்டிக்ஸ் கண்டுப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டே பொருளாதாரச் சூழல் காரணமாக வேல் டெக் யுனிவர்சிட்டியில் இயந்திரவியல் துறையில் உதவிப் பேராசிரியராக நான்கு வருடம் பணிபுரிந்து வந்தேன்.

ஆனால் என் மனம் எப்படியாவது ரோபாட்டிக்ஸ் துறையில் சாதிக்க வேண்டும் என்பதால் அந்தப் பேராசிரியர் வேலையை விட்டேன். என் அறிவை மேலும் மேம்படுத்தி விட வேண்டும் என்று ரோபோடிக்ஸ் துறை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தினேன்.

கல்லூரியில் படிக்கும்போதே நிறைய புராஜெக்ட் செய்து, பெஸ்ட்பெர் ஃபாமர் விருதும் பெற்றுள்ளேன். அப்போது, விவசாயத்திற்காக ஒரு ரோபோ வடிவமைத்தேன்.

மனித உழைப்பை அதிகம் நம்பியிருக்கும் விவசாயத்திற்காக ரோபோ தயாரிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அதை எண்ணத்தில் கொண்டு விதை விதைப்பது, களையெடுப்பது, நிலத்தின் தண்ணீர் அளவை கணித்து தண்ணீரை தெளிப்பது, நாற்றுநடுதல் என ஒரு விவசாயியின் வேலையினை செய்யக்கூடிய ரோபோவினை 2013ஆம் ஆண்டு வடிவமைத்தேன். அந்த ரோபோவினை போன்ஆப் மூலமாக இயக்க முடியும்.

ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில், எனது ரோபோவைக் காண்பிக்க விண்ணப்பித்தேன். எனது ரோபோ பற்றி பிரசன்டேஷன் கொடுப்பதற்காக ஜப்பான் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்தது இதை என்னால் மறக்கவே இயலாது.

அதன்பிறகு மலேசியா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், தைவான், சீனா என 7 நாடுகளுக்குச் சென்று ஆய்வறிக்கைகளை சமர்பித்து உரை நிகழ்த்தியுள்ளேன்.

அமெரிக்காவின் ஆராய்ச்சி டாக்டர்கள் கமிட்டி, மலேசியாவில் ஒரு ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியது. ஜப்பானுக்கு அனுப்பியது போன்ற மற்றொரு ஆராய்ச்சி அறிக்கையை ஒரே மாதத்தில் தயார் செய்து அனுப்பினேன்.

அதுவும் தேர்வு செய்யப்படவே, மலேசியாவிற்கு அழைத்திருந்தனர். அதிலும், சிறந்த ஆராய்ச்சி அறிக்கை என்ற விருதை வாங்கினேன்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நடந்த சர்வதேச ரோபோட் ஆய்வுக் கருத்தரங்கில், ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து ஆய்வுக் கட்டுரைக்கான முதல் பரிசையும் ரோபோட் வென்றது.

மாணவர்கள் புதிய டெக்னாலாஜி பற்றி கற்றுக் கொண்டு புதிய கண்டு பிடிப்புக்களை உருவாக்க வேண்டும். அது ரோபோவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அதில் உங்களை எப்படி நிலை நிறுத்திக் கொள்ளப் போகிறீர்கள் என்பது தான் முக்கியம்.

மாணவர்கள் டெக்னாலஜி பற்றி கற்றுக் கொள்ள வேண்டும் எல்லா மாணவர்களுக்கும் “ரோபோட்டிக்ஸ் கிட்” கிடைக்க வேண்டும் என்று தான் குறைவான விலையில் அந்த கிட்டை வடிவமைத்தோம். இதன் மூலம் ரோபோவை பற்றி அடிப்படை விஷயங்களை நேரடியாகக் கற்றுக் கொள்ளலாம்.

கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூலை ப்ரான்சைஸ் முறையில் விரைவில் துவங்க உள்ளோம். சமூகத்தின் விவசாயம், கல்வி, மருத்துவம், பாதுகாப்புதுறை போன்ற துறைகளுக்கு தேவையான ரோபோடிக் தயாரிக்க வேண்டும்.

ராஜஸ்தான் மாநில அரசு அங்குள்ள 20 அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சியை கற்றுத்தர அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

தமிழக அரசும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சியை கற்றுத் தருவதற்கு ஆவணம் செய்தால் மாணவர்களுக்கு புதிய டெக்னாலஜி பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

அத்துடன் ரோபோடிக்ஸ் துறையில் மாணவர்களின் புதிய சிந்தனைகளால் சாதிக்க முடியும் வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும்…”

முயற்சியால், அயராத உழைப்பால் உலகமெங்கும் பயணித்து விருது பெற்றுச் சாதித்துள்ள ‘ரோபா பாலாஜி’ அவர்கள் தமிழக இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி. சாதனைத் தமிழரின் வெற்றிப் பாதைகள் தொடர ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது.