மூளை என்னும் முதல்வன்-04

திரு. A.மோகனராஜூ, சேலம்

ரு கொசுவிடம்  தோற்கலாமா? பார்ப்பதற்கு மிகச்சிறியதாய் இருந்தாலும் இந்த உலகில் மிகக் கொடியது கொசு. கொசுவிடம் கடி வாங்காத மனிதன் இந்த உலகில் இல்லவே இல்லை. மனிதன் இருக்குமிடம் எல்லாம் கொசுக்களும் இருக்கும், அண்டார்டிக்காவில் கொசுக்கள் இல்லை ஆனால், அங்கே மனிதனால்  வாழமுடியாது. ‘‘கொசுவிடம்   நான் கடிவாங்கியதில்லை’’ என்பவன்  உண்மையில் பொய்தான் பேசுகிறான். இந்தக் கொசுக்கள் அரசு உயர் பதவியில் இருப்பவர், தொழிலாளி, மிகவும் நல்லவன், அதிபொல்லாதவன் என்று எந்தப்பாகுபாடும் மனிதனிடம் பார்ப்பதில்லை. பெண்கள், குழந்தைகள் என்றால் விரும்பிக் கடிக்கும் கொசுக்களுக்கு அவர்கள் அழகானவர்கள் மென்மையாவனவர்கள் என்று நன்றாகத் தெரியும். ஆனால், ஆண்களை அதிகம் விரும்புவதில்லை. நல்ல இரத்தம் இல்லாதவர்கள் என்று தவறாக  கொசுக்கள் நினைக்குமோ என்னமோ.

மனிதன் சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகளை  சாதுரியமாக அடக்கி அடிமையாக்கித்  தன் கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்தான். ஆனால்,   சாதாரணமான பைசாவிற்குப் பொறாத கொசுவிடம் கடிபட்டு கண்கலங்கி மருத்துவமனை முன் பரிதாபமாக நிற்கின்றான். ஒரு   மாநகராட்சிக்கும்  மிகப்பெரும் மருத்துவர்களுக்கும் சரியான சவால் விட்டு  நிலைதடுமாற வைக்கிறது இந்தக் கொசுக்கள்.
உயிரினங்கள் தோன்றிய காலம்தொட்டே உணவிற்காக ஒரு போராட்டத்தை முன் வைக்கின்றன.

உணவே வாழ்விற்கு அடிப்படையாக இருப்பதால்  உயிரினங்களின் வாழ்நாள் முழுவதும் இந்தப்போராட்டம் தொடர்கிறது. விலங்குகளின் வாழ்வில் ஒவ்வொரு நாளும் வாழ்விற்கும் சாவிற்கும் இடையே ஒரு போராட்டம். ஒரு விலங்கு அல்லது ஒரு உயிரி தன் இருப்பிடத்தை விட்டு காலையில் வெளியேறியபின் அது மாலையில் மீண்டும் தன் இருப்பிடம் வந்து கண்டிப்பாக  சேரும் என்பதற்கான உத்திரவாதம் யாரும் கொடுக்க முடியாது.
சரி மனிதனுக்கும் கொசுவிற்கும்  இடையே அப்படி என்ன பிரிக்கப்படாத சொத்துப் பிரச்சனை இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

தினம் தினம் கோடிக்கணக்கான கொசுக்களை மனிதர்கள் அடித்துக் கொல்கிறார்கள், ஆயிரக்கணக்கான மனிதர்களை கொசுக்கள் கடித்துக் கொல்கின்றன. 1930 – ம் ஆண்டு  ஆப்பிரிக்காவில்  மிக அதிகமாக 250 – லட்சம் மனிதர்களுக்கு மேல் கொசுக்கடியால், டெங்கு, நிமோனியா, டயாரியா, மலேரியா என்ற நோய்களால் இறந்துபோனார்கள். இன்றும் உலகில் 23 – நிமிடத்திற்கு ஒருவர் என்று கொசுக்கடியில் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். 

பொருளாதார வளர்ச்சியடையாத பின்தங்கிய நாடுகளில் கொசுவுக்கும், மனிதனுக்கும் இடையே கடுமையான  போராட்டம் இன்றும்  நடக்கிறது. காரணம், உயிர்களின் உணவுச்சங்கிலியில் கொசுக்களின் உரிமை இரத்தம் மனிதனிடம் வைத்துப் படைத்தது, உலகில் எல்லாவற்றையும் அற்புதமாகப் படைத்த இயற்கையின் ஒரே தவறாக இருக்கிறது. பிடிவாதக்கார மனிதன் கொசுவுக்கு ஒரு துளி இரத்தமும் கொடுக்க முடியாது என்று சொல்கிறான். இதுதான்  போராட்டத்தின் மூலக்காரணம். கொசுக்கள் மனிதனுக்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது, டயனோசர்கள் காலத்திலும் இருந்தது இப்போதும் இருக்கிறது எப்போதும்  நிரந்தரமாக இருக்கும். காரணம் கொசுக்கள் தங்களுக்கிடையே சண்டையிடுவதில்லை. கொசு மிகவும் சிறியதாக இருந்தாலும்  ஆறு அறிவு மனிதனிடம் இல்லாத  ஒற்றுமை அதற்கிடையே இருக்கிறது. மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.