முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்!

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ. ஞானசேகர்

ஆடை தயாரிப்பு, சர்க்கரை ஆலைகள், மருந்து தயாரிப்பு மற்றும் பல்வேறு பொருட்களின் மொத்த விற்பனை என்று பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவர் அம்பாலால். குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் ஒரு பெரிய தொழிலதிபர்.

அம்பாலால் மற்றும் சரளா தேவி தம்பதியருக்கு எட்டுக் குழந்தைகள். அக்காலத்திலேயே தம் குழந்தைகளுக்கு விளையாட்டு வழிக் கல்வியையும், சுய சிந்தனையைத் தூண்டும் மன அழுத்தமில்லாத கல்வியையும் வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் இத்தம்பதியர்.

தேடிப்பார்த்த போது வழக்கமான கல்வி முைறயே சுற்றிலும் தென்பட்டது. ஏன் தம் பிள்ளைகளுக்காக ஒரு மாற்றுக்கல்விக் கூடத்தை நாமே நடத்தக்கூடாது? என்று இவர்கள் சிந்தித்த போது, ‘மரியா மாண்டிசோரி’ கல்வித் திட்டம் இவர்களுக்குத் தெரிய வந்தது. அப்போதுதான் உலகம் எங்கும் இக்கல்வித் திட்டம் பரவிக் கொண்டிருந்தது. இந்தியாவில் மிகச் சொற்ப இடங்களில் இருந்தது. எனவே, தம் எட்டுப் பிள்ளைகளுக்கான ‘Retreat’ என்ற கல்வியகத்தை சரளா தேவியே தலைமையேற்றுத் தொடங்கினார்.

விளையாட்டு, பொம்மைகளுடன் குதூகலமான பொழுதுபோக்கு, விரும்பியதைச் செய்து பார்க்கும் உரிமைகள், வாய்ப்புகள் என்று இந்தக் குழந்தைகள் கல்வி பெற ஆரம்பித்தனர். 1919-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி, ஆறாவது பிள்ளையாகப் பிறந்த விக்ரம் சாராபாய்க்கும் இந்த வாய்ப்புக் கிட்டியது.

ஆரம்பத்திலிருந்தே எதையும் கூர்ந்து நோக்குபவராகவும், சிந்திப்பவராகவும், அமைதியான பண்பு கொண்டவராகவும் திகழ்ந்தார் விக்ரம் சாராபாய். குஜராத்தில் இரண்டு ஆண்டுகள் கல்வியை முடித்துவிட்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜான் கல்லூரியில் அறிவியல் பாடத்தினை எடுத்தார், விக்ரம் சாராபாய்.

தேசியக்கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களது ஆசியுடனும், பரிந்துரையுடனும் இந்தக் கல்வியகத்தில் சேர்ந்தார், விக்ரம்.

சிறுவயதில் அடிக்கடி எங்காவது உட்கார்ந்து கொண்டு, எதையாவது வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாராம். அப்போது “என்ன செய்கிறாய்?” என்று யாராவது கேட்டால் “சிந்திக்கிறேன்” என்று பதில் கூறுவாராம். அவரது பெயருக்கு அடிக்கடிக் கடிதம் வருவது உண்டு. “யார் எழுதியது?” என்று கேட்டால், “எனக்கு நானே எழுதிக் கொண்டேன்” என்று கூறுவாராம். இந்தக் கடிதம் எழுதுவதும், குறிப்பெடுத்துக் கொள்வதும், திட்டமிட்டுக் கொள்வதும் அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

கல்வியும் ஆய்வும்

இளம்பருவத்திலிருந்தே அறிவியல் பாடங்களைப் படிப்பதிலும், அவை பற்றிச் சிந்திப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டு திகழ்ந்தார் விக்ரம் சாராபாய். எனவே, அவரது தந்தை பல அறிவியல் நூல்கள் மற்றும் பத்திரிகைகளை ெவளிநாட்டிலிருந்தும் வரவழைத்துக் கொடுத்ததோடு, தன் மகனை மிகவும் ஊக்கப்படுத்தினார்.

இப்படித் துடிப்போடு திகழ்ந்த இவருக்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பெரும் வாய்ப்பாக அமைந்தது. இவரது ஆர்வத்தையும், கேள்வி கேட்கும் நுண்ணறிவையும் கண்டு அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்களே வியந்து போனதுண்டு.

எப்போதும் படிப்பு, ஆராய்ச்சி, நூலகமே கதி, ஆய்வகமே கோயில் என்பதாக விக்ரம் சாராபாயின் உழைப்பும், முயற்சியும் இருந்தது. அவரது நடவடிக்கைகளைப் பார்த்து இவர் படிக்கின்றாரா? அல்லது அறிவியல் ஆய்வுத் தொழில் செய்கின்றாரா? என்று கூடக் கேட்பதுண்டு.

தனது கல்வியில் கவனம் செலுத்திய விக்ரம் அவர்கள், அப்போது உலகில் கவனமெடுத்த ‘காஸ்மிக் கதிர்கள்’ ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆராய்ச்சி என்றால் கொஞ்ச, நஞ்சமல்ல அதில் தன்னையே மூழ்கடித்துவிட்டார்.

இப்படி ஆராய்ச்சி சிறப்பாகச் சென்ற போதுதான் இரண்டாம் உலகப் போர் வந்து உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. பல்லாயிரம் மக்கள் போரில் இறந்த சமயம், பாதுகாப்புக் கருதிக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. மகனின் நலன் கருதி விக்ரமை பெற்றோர் இந்தியா வருமாறு வற்புறுத்தினர். அவரோ தன் ஆய்வை விட்டு விட்டு வரமுடியாது என்று பிடிவாதம் செய்தார். செய்தி, பல்கலை வரை சென்றுவிட்டது. இப்படி ஆர்வமுள்ள மாணவரை இழக்க விரும்பாத பல்கலைக்கழகம், விக்ரம் தன் ஆராய்ச்சியை இந்தியாவிலேயே செய்யலாம் என்று அனுமதியளித்தது.

ஒரு வழியாக இந்தியா திரும்பினார் விக்ரம். அதேசமயம் அவருக்கு மகிழ்ச்சியான வாய்ப்பும் இந்தியாவில் இருந்தது. ஆம், அம்பாலாலின் நண்பரும், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் விஞ்ஞானியுமான சர்.சி.வி. ராமனின் மாணவராக பெங்களூரு வந்தார் விக்ரம். நோபல் விஞ்ஞானிகளான சர்.சி.வி. ராமன், ஜெகதீஷ் சந்திரபோஸ் இருவரும் விக்ரமின் தந்தை அம்பாலாலைச் சந்திக்க அவர்களது வீட்டிற்கே வந்தவர்கள். இப்படிப்பட்ட பெரும் அறிஞர்களின் வழிகாட்டுதல் கிடைத்தது விக்ரமின் அறிவியல் ஆர்வத்தை வலுவாக்கியிருந்தது.

விக்ரம் சாராபாயின் குடும்பம், அதாவது அம்பாலாலின் குடும்பம் மற்றும் உறவினர்களின் குடும்பம் முழுக்க முழுக்க காந்தியடிகளின் தீவிரப் பற்றாளர்கள். சுதந்திரப் போராட்டப் பயணத்தில் காந்தியடிகளோடு பெரும் பங்காற்றியவர்கள். காந்தியடிகளின் பல்வேறு போராட்டங்கள் மற்றும் தொண்டுகளுக்கு ஏராளமான பொருளுதவி செய்தவர்கள்.

விக்ரம் சாராபாய்க்கும் தேசப்பற்று அதிகம் இருந்தது. அதேசமயம் அவர் மனதில் அறிவியல் வளர்ச்சியிலும் இந்தியா விடுதலை பெறவேண்டும்; அதற்காக உழைப்பதும், ஆய்வு செய்வதும்கூட ஒரு பெரும் தேசப் பணிதான் என்ற எண்ணமும் இருந்தது.

ஒருவழியாக இரண்டாம் உலகப்போர் முடிந்தது. தன் ஆய்வை இந்தியாவில் சர்.சி.வி. ராமனின் வழிகாட்டுதலில் தொடர்ந்த விக்ரம், மீண்டும் கேம்பிரிட்ஜ் பல்கலை சென்று தன் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்று வந்தார்.

விண்வெளியியலின் தந்தை

டாக்டர் பட்டம் பெற்ற விக்ரம் இந்திய தேசத்தின் அறிவியல் ஆராய்ச்சியை முடுக்கிவிட வேண்டும் என்று தீவிரமாக யோசித்தார். இச்சமயம் இந்தியா விடுதலை பெற்றிருந்தது. ஆயினும் அறிவியல் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது.

தான் கற்றறிந்த, ஆய்வு செய்த காஸ்மிக் கதிர்கள் அதாவது விண்வெளித் துகள்கள் பற்றிய ஆராய்ச்சியை மேம்படுத்த விரும்பினார். இதன் மூலம் இந்தியா எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் ஜொலிக்கலாம் என்பதைப் பலரிடமும் எடுத்துரைத்தார். அவருக்கு எல்லாப் பக்கமும் ஆதரவு கிடைத்தது.

எனவே, 1947-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அகமதாபாத் நகரில் Physical Research Laboratory அதாவது “இயல் அறிவியல் ஆராய்ச்சியகம்” (PRL) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். முதலில் ஒரு சிறிய இடத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு மையத்தின் சொந்தக் கட்டடத்தை 1952-ஆம் ஆண்டில் சர்.சி.வி. ராமன் தொடங்கி வைத்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதி நவீன ஆராய்ச்சிக்கூடமாக உருவெடுத்த இந்த நிறுவனத்தை அன்றைய பாரதப் பிரதமர் நேரு திறந்து வைத்தார்.

இந்நிறுவனத்தில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ள இந்திய இளைஞர்களைக் கண்டுபிடித்து, மிகுந்த திறனாய்வு செய்து கொண்டு வந்து சேர்த்தார் விக்ரம் சாராபாய். இன்றைய இந்தியாவின் விண்வெளி வளர்ச்சிக்கும், சாதனைக்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக இது அமைந்தது.

விக்ரம் சாராபாயிடம் காணப்பட்ட குணங்களில் முதன்மையானதும், எல்லோரும் அவரிடம் கற்றுக்கொண்டதும் அவரது தளராத நம்பிக்கையாகும். எப்போதும், எதையும் நேர்மறையாகவே எடுத்துக் கொள்வார். ‘தொடர்ந்து முயலுங்கள் முடியும்’ என்று ஊக்கமூட்டுவார்.

ஒரு சமயம் PRL – நிறுவனத்தில் இளம் விஞ்ஞானிகள் ஒரு பலூனைப் பறக்கவிட முயன்றார்கள். விக்ரம் சாராபாய் முன்பு அவர்கள் இதைச் செய்ய முயன்று தோற்றுப் போனார்கள். உடனே, மனமொடிந்து போனார்கள். இதைக் கவனித்த சாராபாய் அவர்களிடம், “நீங்கள் சோர்ந்து போகக்கூடாது. இன்று முடியாவிட்டால் என்ன? நாளை சாதிப்பீர்கள்” என்று கூறியதும், அவர்கள் உத்வேகம் பெற்று அடுத்த நாள் பலூனை வெற்றிகரமாகப் பறக்கவிட்டார்கள்.

இந்தக் காலக்கட்டத்தில் விக்ரம் சாராபாயின் மனம் இந்திய தேசத்தில் “ராக்கெட்” உருவாக்கம் பற்றிச் சிந்தித்தது. அதாவது சிறிய அளவில் செயற்கைக் கோள்களை ஏவுதல் மூலம் இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத்தை உயர்த்தலாம், தொலைபேசிச் சேவை, வானிலை நிலவரம், புவியியல் ஆய்வுகள் என்று வளர்ச்சிப் பாதையில் பயணிக்கலாம் என்று நம்பினார்.

அன்றைய காலக்கட்டத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் போட்டி போட்டு விண்வெளிப் பயணங்களில் கவனம் செலுத்தின. அவர்களோடு போட்டி போட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவது கடினமானதுதான். ஆனாலும், எதிர்காலத்தில் இந்தியாவுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் பலரிடமும் இதுபற்றிப் பேசினார். உலக நாடுகளில் நமது இளைஞர்களை அனுப்பி வைத்துத் தொழில் நுட்பத்தைக் கொண்டு வந்து, தொடர்ந்து நமது முயற்சியால் ஜெயிக்கலாம் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அவரது முயற்சிக்கு ஆதரவும் கிட்டியது.

இந்திய தேசத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கச் சிறந்த இடம் என்று திருவனந்தபுரம் தும்பாவைத் தேர்வு செய்தார், விக்ரம் சாராபாய். விண்வெளித் தொழில்நுட்பத்தில் பூஜ்ஜிய நிலையிலிருந்த தேசத்தை ராக்கெட்டை விண்ெவளிக்குச் செலுத்திடச் செய்யும் நிலைக்கு உயர்த்தினார்.

மாபெரும் வழிகாட்டி

1962-ஆம் ஆண்டு INCOSPAR (Indian National Committee for Space Research) என்ற நிறுவனம் விக்ரம் சாராபாய் தலைமையில் தொடங்கப்பட்டது. 1969-இல் இந்த நிறுவனம் ISRO – இஸ்ரோ (Indian Space Research Organisation) என்று மாற்றப்பட்டு இன்று, பல இடங்களில் கிளை பரப்பிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய ராக்கெட் ஆய்வுகளுக்காக இந்திய அளவில் இளைஞர்களைத் தேடிக் கண்டுபிடித்ததில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமும் ஒருவர். அப்துல்கலாம் அவர்களின் குருவாகவும், விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் விக்ரம் சாராபாய் அவர்கள். 1963-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

இன்று இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி இத்தகைய இடத்தைப் பெற்றுள்ளதற்கு இந்தச் செயற்கைக்கோள்களே காரணம். விமானப் போக்குவரத்து முதல் அனைத்துத் தொழில்துறைகளிலும் தகவல் தொடர்பில் ஏற்றம் பெற வழிவகுத்துள்ளது. நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து ஏவி வரும் செயற்கைக்கோள்கள். விக்ரம் சாராபாய் அவர்களின் கனவு நனவாகி இன்று வெளிநாட்டினரின் செயற்கைக் கோளையும்கூட நமது தளங்களில் இருந்து செலுத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது இந்தியா. இந்த வளர்ச்சிக்கு வழிகோலியதால் தான் அவரை “இந்திய விண்வெளியியலின் தந்தை” என்று பெருமையோடு அழைக்கின்றோம்.

திறமைமிகு மனிதர்

விக்ரம் சாராபாய் அவர்கள் விஞ்ஞானியாக மட்டுமல்ல, தலைச்சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். இவரால் தொடங்கப்பட்ட பல முக்கிய நிறுவனங்கள் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளன; இன்றும் பங்காற்றி வருகின்றன.

இந்தியாவின் புகழ்பெற்ற மேலாண்மை நிறுவனமான IIM (A) என்று சொல்லக்கூடிய Indian Institute of Management (அகமதாபாத்) விக்ரம் சாராபாய் அவர்களால் தொடங்கப்பட்டது. இன்றும் புகழ்பெற்ற மேலாண்மை நிறுவனமாகத் திகழ்கின்றது. உலகளவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய அளவில் தலைச்சிறந்த நிறுவனங்களுக்கும் சிறந்த நிர்வாகிகளை உருவாக்கி வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.

இந்தியாவில் பல்வேறு தொழில்துறைகளில் முன்னேற்றத்தைக் காணவும், நமது தேசத்திலேயே பல கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் அவசியம் உள்ளதை விக்ரம் சாராபாய் உணர்ந்தார். எனவே, National Institute of Design (NID) என்ற தேசிய வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். புதுமையாகச் சிந்திப்பதன் மூலம், புதிய வடிவமைப்புகளை மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கித் தொழில் துறையில் மட்டற்ற வளர்ச்சி பெற வழிகாட்டியது இந்த நிறுவனம்.

மேலும், ஜவுளித் தொழிலில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டுவர Ahmadabad Textile Industry’s Research Association என்ற ATIRA என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். ஆலைகளில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஜவுளி உற்பத்தியை அதிகரித்தல் என்பதற்கு இந்த நிறுவனமே தொடக்கமாக அமைந்தது. இவை ஆரம்பத்தில் நெசவுத் தொழிலுக்குப் பெரிய அடியைத் தந்ததும், பல கலவரங்களுக்கும் வித்திட்டது. காலப்போக்கில் ெபரிய தேசத்தின் தேவையைக் கண்டபோது இதன் பயன்கள் எல்லோரையும் சென்றடைந்தது.

விக்ரம் சாராபாயின் மற்றொரு சாதனை Operations Research Group (ORG) என்பதாகும். உற்பத்திக்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு, மக்களின் தேவையைக் கண்டறிந்து அதனைச் சந்தைப்படுத்தும் முயற்சிக்காக அமைந்ததே இந்த நிறுவனம். இன்று எந்தப் பெரிய தொழில் நிறுவனமாக இருந்தாலும் அவர்களிடம் ஆராய்ச்சிக்கான ஒரு அமைப்பு இருந்ேத ஆகும். இதற்கான விதையை விதைத்தவர் விக்ரம் சாராபாய் அவர்கள்.

விக்ரம் சாராபாய் அவர்கள் தத்துவ நூல்களை அதிகம் படிப்பவர். ஜாஸ் இசையை மிகவும் விரும்பிக் கேட்பவர். பல சமயங்களில் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே பணி ெசய்வாராம். எப்போதும் எல்லோரையும் நேர்மறையாக ஊக்கமூட்டுபவர். அறிவியல் அறிஞர் என்றால் அழுக்கான உடை, தளர்ந்த நடை, தாடியுடைய முகம் என்று இல்லாமல், சுத்தமான உடையிலும், அழகிய ேதாற்றத்திலும் திகழ்ந்தவர் விக்ரம் சாராபாய் அவர்கள். தனது பேச்சின் மூலம் எல்லோரையும் வசீகரித்துவிடும் தன்மை கொண்டவர். டாக்டர் அப்துல் கலாம் அவர்களது நூலில் பல இடங்களில் தனது குருநாதர் விக்ரம் சாராபாய் அவர்கள் தந்த வழிகாட்டுதலையும், ஊக்கத்தையும் எழுதியுள்ளார் என்பதே நமக்குப் பெரிய சான்றாகும்.

அறிவியலின் அடிச்சுவட்டில் அடியெடுத்துப் பயணித்த இந்திய தேசத்தில் விண்வெளியியல், தொழில்துறை, நிர்வாகவியல் என்று பல்துறைகளில் தன் அயராத உழைப்பைத் தந்து இன்று நாம் காணும் தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட இந்தியாவுக்குக் காரணமாகத் திகழும் விக்ரம் சாராபாய் அவர்கள் நமது தேசத்தின் மாபெரும் பொக்கிஷமே!