வெள்ளோட்டம் வெல்லட்டும் – 13

இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

இந்தியாவின் நிர்பய் ஏவுகணை உருவாக்கத்தில், விஞ்ஞானிகள் சந்தித்த சவால்களும் வெற்றியும் சுவாரசியமானவை. அவைப்பற்றிப் பேசுவோம்.

‘க்ரூஸ்’ ஏவுகணை, ஏவப்பட்ட பின் கீழிறங்கி பூமிப் பரப்பிற்கு அல்லது கடற்பரப்பிற்கு மிக அருகில் பறந்து சென்று இலக்குகளைத் தாக்கும். இந்த உயரத்தில் மரங்களும், பறவைகளும், கடலலையும் ரடார்களைக் குழப்பும். இதனால் ‘க்ரூஸ்’ ஏவுகணை ரடார்களின் பார்வையிலிருந்து தப்பும். வழியில் குறுக்கிடும் மலைகளையும், கட்டடங்களையும் தவிர்த்து க்ரூஸ் ஏவுகணை பறக்கும்.

அக்னி, பிருதிவி, தனுஷ் உள்ளிட்ட இந்திய ஏவுகணைகள் ‘பேலஸ்டிக்’ ஏவுகணைகள். இந்தியாவின் ஒரே ‘க்ரூஸ்’ ஏவுகணை பிரமோஸ். பிரமோஸ் ‘க்ரூஸ்’ ஏவுகணையின் பயண தூரம் ஏறக்குறைய 290 கிலோ மீட்டர். இந்தியாவிடம் நீண்ட தூரம் பறந்து தாக்கவல்ல ‘க்ரூஸ்’ ஏவுகணை இல்லை. இந்தப் பின்புலத்தில் துவங்கப்பட்ட திட்டம்தான் நீண்ட தூர ‘க்ரூஸ்’ ஏவுகணை ‘நிர்பய்’ (நிர்பய் என்றால் அச்சமில்லை என்று பொருள்.) பெங்களூருவிலுள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகமான ‘விமானவியல் மேம்பாட்டு நிறுவனம்’ (Aeronautical Development
Establishment), நிர்பய் ஏவுகணைத்திட்டத்தை முன்னெடுத்தது.

நிர்பய் ஏவுகணை

‘நிர்பய்’ நீண்ட பயண தூரம் கொண்டது. மிகக் குறைவான உயரத்தில் பறப்பதால் இடையில் வரும் தடைகளைத் தவிர்த்து கவனமாகப் பறக்க வேண்டும். ஆக ‘நிர்பய்’ ஒரு ஏவுகணையாக இருந்தாலும் நீண்ட தூரம் கட்டுப்பாட்டோடு பறக்க வேண்டியிருப்பதால், ஒரு விமானமாகவும் இருக்க வேண்டியது அவசியம். இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எல்லா ஏவுகணையிலிருந்தும் ‘நிர்பய்’ இங்குதான் வித்தியாசப்படுகிறது. ஆம், ‘நிர்பய்’ ஏவுகணையாக ஏவப்படுகிற விமானம்.

ஏவுகணை செங்குத்தாக கப்பலிலிருந்தோ, ஏவு வாகனத்திலிருந்தோ செலுத்தப்படும். ஒரு விமானத்தைச் செங்குத்தாகச் செலுத்த இயலாது. எனவே, இறக்கை மடிந்து விரியும் வகையில் வடிவமைக்கப்பட்டதுடன், விமானமும் உருளை வடிவக் குறுக்கு தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டது. இறக்கை மடித்த விமானம், ஏவு குழாய்க்குள் வைத்து ஏவப்பட எதுவாக அமைக்கப்பட்டது.

ஏவு குழாயிலிருந்து ஏவப்பட்ட பின்பு, இறக்கை விரிய வேண்டும். விமானத்தின் அதிவேகப் பயணத்தில் இறக்கை விரியாமல் போனால் என்ன செய்வது? இதற்கான சோதனைகள் நடத்தப்பட்டன. தண்டவாளத்தில் மிக வேகமாக விமானத்தை நகர்த்தி இறக்கையை விரிய விட்டுச் சோதனை செய்தார்கள் விஞ்ஞானிகள்.

ஏவுகணையின் முக்கிய அங்கமான எஞ்சின் இந்தியாவில் இல்லை. அயல்நாடுகளிலிருந்து எஞ்சினைப் பெறுவதற்கு செய்யப்பட்ட சில முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஏனெனில் எந்த நாடும் மற்ற நாட்டின் ஏவுகணை முயற்சிக்கு சுலபத்தில் உதவாது. கடைசியாக, ஒரு நாட்டிலிருந்து எஞ்சின் பெறப்பட்டது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்ட எஞ்சினையும், விமானத்தையும் ஒருமித்து இயக்குவது அத்தனை சுலபமில்லை. ஆனால் அந்தக் கடினமான பணியை இந்திய விஞ்ஞானிகள் செய்தார்கள்.

ஏவுகணையின் துணைத்தொகுதிகள் எல்லாம் தனித்தனியாக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

வங்காளவிரிகுடாவில் சோதனை

விமானத்திலிருந்து தரைக்கட்டுப்பாட்டு மையங்களுக்குத் தகவல் பரிமாறும் உபகரணங்களை வழக்கமாக ஹெலிகாப்டரில் கொண்டுசென்று சோதனைப் பாதையில் பறக்க வைத்து சோதிப்பார்கள். ஹெலிகாப்டரின் வேகம் குறைவு. தொடர்ச்சியாக இயக்குவதும் சிரமம். எனவே ஒரு சிறிய ரக விமானம் இச்சோதனைக்குப் பயன்படுத்தப்பட்டது. (இவ்விமானம் தமிழகத்தைச் சேர்ந்தது என்பதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.) தன்னந்தனியாக வங்காள விரிகுடாக் கடலில் பல மணி நேரங்கள் பறந்து தொலைத்தொடர்பு சாதனங்களை சோதிப்பதில் உதவிய விமானியும் பாராட்டத்தக்கவர். (இடையில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கு வழியில்லை).

இப்படிப் பலவாறாக சோதனைகள் முடிந்த பிறகே, ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை 2013 மார்ச் 12 ஆம் தேதி நடந்தது. தீ கக்கி விண்ணில் சீறிப்பாய்ந்த ‘நிர்பய்’, தனது இறக்கைகளை விரித்து வங்கக்கடலின் மேல் முன்குறித்த பாதையில் பயணப்பட்டது. ‘நிர்பய்’ ஏவுகணையைப் பின்தொடர்ந்து ‘சுகோய்’ ரகப் போர் விமானமும் சென்றது. ஏவுகணைக்கு அருகில் பறந்து கவனித்த சுகோய் விமானி, ‘‘நிர்பய் ஒரு விமானி இயக்கிய விமானம் போலவே செயல்பட்டது’’ என்று வியப்பு தெரிவித்தார்.

சவாலும் வெற்றியும்

இருபது நிமிடங்கள் தன் பாதையில் சென்ற ‘நிர்பய்’, வழிகாட்டுக் கட்டுப்பாடு தவறி பாதை விலக ஆரம்பித்தது. ஏவுகணைகள் வழிவிலகும் போது அவைகளை அழிக்கக்கூடிய அம்சமும் அதில் இருக்கும்.

 எனவே, எரிபொருளோடு ஒடிசா கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்த ‘நிர்பய்’ அழிக்கப்பட்டது. தரைக்கட்டுப்பாட்டின் மூலம், வழிமாறிய ஏவுகணையை அழிக்க முடியும் என்பது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது.

சோதனையில் இருபத்தைந்து சதவீத பயண தூரத்தை மட்டுமே கடந்திருந்தாலும், சோதனையின் பெரும்பாலான நோக்கங்கள் குறிப்பாக செங்குத்து ஏவுமுறை, முன்குறித்த பாதை நோக்கி திரும்புதல், பூஸ்டர் பிரிதல், இறக்கை விரிதல், எஞ்சின் இயங்குதல் போன்றவை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டன. மேலும் ஏவுகணை ஏறக்குறைய 200 கிலோ மீட்டர் தூரம் பறந்தது. (சென்னையிலிருந்து சிதம்பரம் இதே தூரம்தான்).

விஞ்ஞானிகளின் ஏழாண்டு கால முயற்சி, ‘நிர்பய்’ ஏவுகணையின் இருபது நிமிடப் பயணத்தோடு முடிந்து விடவில்லை. தொடர்ந்து தடைகளைத் தாண்டி முன்சென்று அக்னி, பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளின் அனுபவத்தைக் கொண்டு அடுத்த கட்ட சோதனைகள் தொடர்ந்தன.

இரண்டாவது முயற்சியில் அக்டோபர் 17, 2014 அன்று நிர்பய் ஏவுகணைச் சோதனை மகத்தான வெற்றி பெற்றது. தேசமே வெற்றியைக் கொண்டாடியது. நிர்பய் ஏவுகணைத் திட்டத்தின், திட்ட இயக்குனர் திரு.வசந்த சாஸ்திரி அவர்களுக்கு 2015 ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தோல்விகளும் சவால்களும் வெற்றியின் சுவையைக் கூட்டுகின்றன என்பதை அறிவியல் வாசனையோடு நிரூபித்தார்கள் நமது ராணுவ விஞ்ஞானிகள்.

பொதுவெளியில் மிகப்பிரபலமான பிரமோஸ் ஏவுகணையின் சிறப்புகள் என்னென்ன? சோதனைகள் என்னென்ன?

(சோதனை தொடரும்)